திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அம்பட்டனும் ப்யூட்டிஷ்யனும்-கார்ப்பரேட் கத்திரிகள்

  மக்கள் திரள் முழுவதையும் நுகர்வோராக மட்டுமே மாற்றியுள்ளது இன்றைய வணிக நடைமுறைகள். மக்களின் இன்றியமையாத தேவைகளைப் பட்டியலிடுவது தொடங்கி எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது வரை ஒவ்வொரு  நிறுவனமும் மக்களுக்குக் கற்பிக்கின்றன. தண்ணீர், காய்கறி, பழங்கள், உணவு, ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாவற்றிலும் தரம் நிர்ணயிக்கப்பட்டு மக்களை நுகர நிர்பந்திக்க்ன்றன அதன் தயாரிப்பு நிறுவனக்கள். எதைக் குடிப்பது , உண்ணுவது, உடுத்துவது என நம் விருப்பங்கள் அனைத்திலும் இவற்றின் குறுக்கீடும் நிர்பந்தமும் உண்டு. இவர்கள் தேசம் தழுவி கண்டம் தாண்டி பன்னாட்டளவில் செயல்படுகின்றனர்.


  ஒரு குறிப்பிட்ட மக்கள் திரள் அதாவது உயர் மத்திய தர வர்க்கத்தினரை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்நிறுவனங்களின் வியாபார முயற்சிகள் நாளடைவில் சமூகத்தின் அனைத்துப்  பிரிவு மக்களுக்குமானதாக விரிவாக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் , துரித உணவுகள், ஆயத்த ஆடைகள், ஆயத்த உபயோகப்புருட்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் போன்ற அனைத்துப் பொருட்களின் நுகர்வோர்களாக மக்கள் மாற்றப்படுகின்றனர். ஒரு சமூகத்தின் மரபான உணவுப்பொருள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, மருத்துவ அறிதல்கள் போன்ற அறிவு மரபுகள் சிதைக்கப்படுகின்றன. இவற்றைச்செய்துவந்தவர்களின் வாழ்வாதாரங்கள் ஒடுக்கப்படுகின்றது. இவ்வகையான துறைகளில் நவீன வளர்ச்சிகளை உள்வாங்குதல் என்பது வேறு; மரபான அறிவு மரபுகளை இழப்பது என்பது வேறு. தமிழகத்தின் மரபானத்தொழில் நுட்பர்களாகக் கருதப்படுகின்ற மரவேலை செய்வோர், நெசவாளர், குயவர், வண்ணக்கலவையாளர், மருத்துவர் போன்றோரின் வாழ்வில் இன்றைய தொழில் நுட்பமும் முதலாளித்துவமும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிப்பது அவசியமாகிறது.


  மேற்குறித்த துறைகள் ஒவ்வொன்றிலும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகள், மாற்றங்கள் பற்றியும் அத்தொழில்களில் முதலீடு செய்து லாபமடையும்முதலாளிகள் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகள் எழுதுவது அவசியம். மருத்துவர், நாவிதர் என்றழைக்கப்படும் சாதியின் குடித்தொழில்கலுள் ஒன்றாகக் கருதப்படுவது முடிவெட்டுதல் முகம் மழித்தல் ஆகியன. மருத்துவர்களாகவும் வைத்தியர்களாகவும்   தமிழகக் கல்வெட்டுக்களில் அறியப்படும் இவர்கள் எக்காலத்திலிருந்து சவரத்தொழிலில் ஈடுபட்டனர்; ஈடுபடுத்தப்பட்டனர் எனும் பண்பாட்டாய்வை வேறொரு கட்டுரையில் எழுதலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலங்களில் இத்தொழில் செய்வதால் நாவிதர்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. பட்டியல் சாதியினர் தவிர்த்து பிற சாதியினர்க்கு அவரவர் வீட்ட்ற்குச்சென்று மழித்து முடிதிருத்தும் வேலை இவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருந்ததும் அத்ற்குக் கூலியாக வருடத்திற்கு இரண்டு நெற்கட்டும் ஒரு நாளின் இருவேளை சோறெடுத்தலும் கட்டாயமாக்கப்பட்டிருந்ததையும் அறியமுடிகின்றது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டபோது இவற்றின் எச்சத்தைப் பல கிராமங்களில் இன்றும் காணமுடிகின்றது. இவ்வகையான சமூக இழிவுகளை மீறும் நடைமுறைகளாக  சலூன் கடைகள் திறக்கப்படுதலை புரிந்துகொள்ளலாம். இதன்மூலம் சவரம் செய்துகொள்வோர் இக்கடைகளுக்கு வந்து செய்துகொள்வதோடல்லாமல் கூலியாக மேரைக்குப்பதில் பணம் ப்ர்றும் வழக்கமும் தொடங்கியது. சலூன் கடைகள், இச்சாதியினரின் சமூக பொருளாதார நிலைகளில் ஏற்படுத்திய மாற்றங்களை இவ்விதம் புரிந்துகொள்ளலாம்.  சவரத்தொழில் நாளடைவில்  அடைந்த மாற்றங்களை அழகு பற்றி மக்களிடையே உருவாக்கப்பட்ட கருத்து நிலைகளோடு இணத்துப் பேச முடியும். முடி திருத்தும் கடை என்பதிலிருந்து அழகு நிலையங்களாக இவை உருமாற்றப்படுகின்றன. இவ்வகையான் மாற்றங்களைச் செய்வோர் யாரென்பதும் அவர்களின் சமூகப்பிண்ணனியும் இங்கு முதன்மை கேள்விகளாகின்றன.


  குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாட்டு மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் அழகு பற்றிய பிம்பங்கள் என்பவை அடிப்படையில் வியாபார நலன்கள் சார்ந்த ஒன்றாக இருக்கின்றன. இயல்பில் நாம் ‘அழகற்றவர்கள்’ என்றும் நம்மை அழகாக்கும் வழிமுறைகள் உண்டென்றும் மக்கள் போதிக்கப்படுகின்றனர். இப்போதனைகளைச் செய்வதில் பன்னாட்டு நிறுவனங்களும் ஊடகங்களும் முன்னிற்கின்றன. இதில் உள்ளூர்  நிறுவனக்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் பெரும்பங்குண்டு. தங்கள் நிறுவனத் தயாரிப்புகளைக் குறிப்பாக அழகு’ சாதனப் பொருட்களைச்சந்தைப்படுத்தும் பொருட்டு மக்களிடையே அழகு பற்றிய கற்பிதங்களை ஊடகங்களின் உதவியுடன் இவை செய்துமுடிக்கின்றன. இதன் தொடர் நிகழ்வாகவே அழகிப்போட்டிகள் நிகழ்த்தப்பெறுவதை நாம்  அறிவோம். சிறந்த அழகிகளாகத் தெரிவு செய்யப்படுவோர் வள்ரும் நாடுகளைச்சார்ந்தவர்களாக இருப்பது தற்செயலானதல்ல.  தமது தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அழகியரின் நாடுகளில் சந்தைப்படுத்த பெரு நிறுவனங்கள் மேற்கொள்ளும் தந்திரமாக இதைப் புரிந்துகொள்ளலாம்.


   இப்பின்புலத்தில், அழகு சாதனப்பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தனது பொருட்களைச் சந்தைப்படுத்த சலூன்களைத் தெரிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தயாரிப்புகளைத் தனியாகச் சந்தைப்படுத்துவதைவிட சலூன் கடைகளை வேறொரு தளத்திற்கு மாற்றி அதன்மூலம் சந்தைப்படுத்துதல்  இவர்களுக்கு எளிதாகிறது. இப்புள்ளியில்தான் அழகுசாதன்ப்பொருட்கள் தயாரிக்கும் உள் நாட்டு முதலாளிகளும் உயர் சாதியினரும் பன்னாட்டு நிறுவனங்களும் ஒன்றினைகின்றனர். பெரு நகரங்களில் இவர்களால்தான் சவரக்கடைகள் அழகு நிலையங்களாக மாற்றமடைந்து வருகின்றன்.


  இன்றைக்கும் கிராமங்களில் இழிதொழிலாகவே கருதப்படும் இத்தொழில் நகர்ப்புறங்களில் பெரும் முதலாளிகள், உயர்சாதியினர் ஆகியோரின் கூட்டுறவில் வேறொரு வடிவம் எடுப்பதைக் காணமுடிகிறது. நட்சத்திர ஹோட்டல்களிலும் தனியாகவும் இவ்விதக்கடைகள் செயல்படுகின்றன. குளிரூட்டப்பட்ட அறைகள், சொகுசு இருக்கைகள் என பல்வேறு அம்சங்களுடன் இக்கடைகள் உருவாக்கப்படுகின்றன. வழமையான சவரக்கடைக்குள் செல்லும் உணர்வு சிறிதுமின்றி  நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையொன்றில் இருப்பதான உணர்வே தோன்றும். இங்கு அறை எனக்குறிப்பிடுவது பல்வேறு அறைகள் கொண்ட பெரும் பகுதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் முதலீடு செய்பவர்களாகத் திரைத்துறையினர், என் ஆர் ஐ க்கள், மென்பொருள் துறையின் அதிகரிகாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள் போன்றவர்களும் பார்ப்பனர், முதலி,  பிள்ளை போன்ற் சாதியினரும் இருக்கின்றனர்.


  நகர்ப்புறங்களில் உயர் மற்றும் இடைநிலை, பட்டியல் சாதியினர் வேறு ’நல்ல’ வேலை கிடைக்காததாலும் வறுமையின்  பொருட்டும் சவரத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது வேறு விசயம். ஆனால் நிறுவனங்கள், பெரும்பணக்காரர்கள் லாபனோக்கில் இத்தொழிலில் செய்யும் முதலீடுகள் குறித்து விவாதிப்பதென்பது அவசியமான ஒன்று.


   பொதுச்சமூகத்தால் இன்றும்  இழிதொழிலாகக் கருதப்படும் இத்தொழிலில்  பெரும் முதலீடுகளைச் செய்து லாபமடையும் நிறுவனங்களில் சில..

  naturals,    green trends,     lime lite,     block&white,    studio profile,    studio essential,         braight&white,     lakme,     reliance     போன்றவற்றைக்  குறிப்பிடலாம். இந்நிறுவனங்கள்  ஒவ்வொன்றும் தமிழகத்தின் பல பகுத்திகளில் பல கிளைகளைக்  கொண்டுள்ளன. சென்னையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளை   'நேச்சுரல்ஸ்'   நிறுவனம் கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும்      20  க்கும் மேல் பல நகரங்களில் கிளைகளைக்கொண்ட நிறுவனம் இது.

  green trends,     lime lite    போன்ற அழகு நிலையங்கள் cavin care னிறுவனத்திற்குச் சொந்தமானவை. இதற்கும் தமிழகம்முழுக்க கிளைகள் உண்டு.    lakeme    எனும் அழகு சாதனப்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதாக அறியமுடிகின்றது.               (பாலு- நேச்சுரல்ஸ்)    

  இதுபோன்ற நிலையங்களின் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் எவரும் நாவிதர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். மாறாக வேலை செய்யும் ஆட்கள் 95% நபர்கள்  நாவிதர் சாதியைச் சார்ந்தவர்கள்.(முனுசாமி-சவரத்தொழிலாளர் நலச்சங்கம்)   cavin care    நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஊ.மு.ரங்கனாதன் பார்ப்பனர். இவரின் சகோதரர் ஜெகதீஷ்        naturals     இன் உரிமையாளர் ஆவார்.   block&white   மற்றும்   bright&white    இன் உரிமையாளர்கள் கணக்குப்பிள்ளை சமூகத்தவர்கள். இவ்விறண்டு நிறுவனngகளுக்கும் தமிழகம் முழுக்க தலா 20க்கும்  அதிகமான் கிளைகள் உண்டு.

  இந்த அழகு நிலையங்கள் அனைத்தும் இருபாலருக்குமானவை என்பது குறிப்பிடத்தக்கது. சில நிலையங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தனித்தனிப் பிரிவுகளுடன் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையங்களின் பெயர்களுக்கீழ்       unisex,      saloon & spa,        family saloon & spa        எனும் குறுவாசகங்கள்    இடம்பெறுவதைக்காணலாம்.   spa    என்பது  மசாஜ் செய்வதைக்குறிக்கின்றது.

  மேற்குறித்த   நிறுவனங்கள் அனைத்திற்கும்  சொந்த  பயிற்சி  மையங்கள் உள்ளன. அவற்றில் பயிற்சி பெற  பயிற்சிக்குத் தகுந்தாற்போல ரூ. 20000 முதல் 100000 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு  நாளும்  புதுப்புது  முகம்  மற்றும்  மழித்தல்   தலைப்பூச்சு  முறைகள்       குறித்து தொழிலாள்ர்கள்    பயிற்றுவிக்கப்படுகின்றனர்.   நாவிதர் சாதி இளைஞர்கள்    இந்நிலையங்களில்   பணியமர்த்தம்    செய்யப்படும்  முன் அவர்களின் தொழில் திறன் பரிசோதிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்தி கத்திரித்தல், மழித்தல், அழகுபடுத்தல், மசாஜ் செய்தல் என பலவாறாகப் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.இவர்கள் முகம் மழித்துக்கொள்ள வருபவரை பல்வேறு முகப்பூச்சு, மயிர்க்கு வண்ணமிடல் ஆகியவற்றச்    செய்துகொள்ளும்படி  தூண்ட வேண்டும்.


  இந்நிறுவனங்களின்   ஒவ்வொரு கிளைக்கும்   மாதம்   குறிப்பிட்ட        இலக்கு    நிர்ணயிக்கப்படுகிறது.     மூன்று லட்சம்   முதல்   பத்து   லட்சம் வரை    இலக்குகள் அமைகின்றன.    கிளைகள்    அமைந்துள்ள பகுதிகளைப்  பொறுத்து   இலக்குகள் வேறுபடுகின்றன. குறிப்பிட்ட   இலக்கை   எட்டாத கிளையின் பொறுப்பாளரை  ,ஊழியர்களை அவமதித்தல், கிளைக்குள் மாற்றம், பணி நீக்கம் என தண்டிக்கப்படுகின்றனர்.(    கதிரவந்    green trends)     இப்பெரு  நிறுவனங்களின்   கிளைகளி   எதாவதுரு   பகுதிகளில் அமைத்துக்கொள்ள விரும்புவோர்    40 முதல் 75 லட்சம்   வரை நிறுவனத்தலைமைக்குச் செலுத்த வேண்டும்.   70:30,    60:40 என்ற   அளவில் வருவாய்ப் பகிர்வின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்கள்        செய்யப்படுகின்றன.    நாவிதர் சாதி   இளைஞர்கள்   naturals     குழுமத்தின் பெயரில் கடை திறக்க அணுகியபோது இவ்விவரம் தெரியவந்துள்ளது.  கிராமங்களில் தரமான  கல்வி பெறும் வாய்ப்பின்றி குலத்தொழிலில்  ஈடுபட நேர்ந்த இவர்கள் இம்மாதிரியான கடைகளின் பங்குதாரர்களாக முடியாமல் போவது       இப்பின்புலத்தில்தான்.


   பெண்களுக்காக மட்டும் நடத்தப்படும் அழகு நிலையங்கள் பெரும்பாலும் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியி  னுடையவை.  (குருநாதன் - சவரத்தொழிலாள், அமைந்தகரை)    ஆண்களின் ‘அழகை’ விட பெண்களின் ‘அழகு’ குறித்து   உள்ளூர்   மற்றும்   உலக   முதலாளிகளின்   அக்கறை கூடுதலானது.    சென்னையிலுள்ள  பெரும்பாலான   பெண்கள்  அழகு நிலையங்களின் உரிமையாளர்களாக அரசியல்வாதிகள், காவல் மற்றும் வருவாய்த்துறை   உயரதிகாரிகள்     இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.(மேலது)

  அதிகார மையங்களில்    இருப்பவர்களால்    நடத்தப்படும்    இந்த நிலையங்களின்   பெண் வாடிக்கையாளர்களை    பாலியல் தொழிலில் ஈடுபடவும்   தூண்டுகின்றனரெனச் சொல்கின்றார் குருநாதன். பொதுவாக இந்த கார்ப்பரேட் அழகு நிலையங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் வடகிழக்கு மாநிலத்தச்  சேர்ந்தவர்களாவர். அங்கு நிலவும் அரசியல் சமனற்ற சூழலின் காரணமாக குறைந்த ஊதியத்திற்கு இவர்களின் உழைப்பு இங்கு சுரண்டப்படுகின்றது. இதுவன்றி கார்ப்பரேட் சவரக்கடைகள் இப்பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது குறித்து நமது ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன.   block&white     நிறுவனத்தின் முதலாளி ரமேஷ்  தன் நிறுவனத்தில் பணியாற்றும் வடகிழக்கு மா நிலத்தைச்    சேர்ந்த        பெண்களை        பாலியல்   தொழிலில்   ஈடுபட   கட்டாயப்படுத்தியதை  எதிர்த்து  அப்பெண்கள் கூட்டாக காவல் துறை ஆணையரைச் சந்தித்து புகார் அளித்ததையும் ரிப்போர்ட்டர்    இதழ் 2011ல்  எழுதியதை   இங்கு   கவன்ப்படுத்திக் கொள்ளலாம்.


    தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற மூன்று    சவரத்தொழிலாளர்       சங்கங்கள்    உள்ளன.    இவை எதிலும்     தங்கள்    நிறுவனக்களையோ கிளைகளையோ  தொழிலாளர்களையோ இவற்றின் முதலாளிகள் பதிவு செய்துகொள்ள  அனுமதிப்பதில்லை.    வாரம்,  மாதம்  ஒரு நாள் விடுமுறையும் அளிப்பதில்லை.   சங்கத்தின் எந்த   விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்ற மறுப்பதாகச் சொல்கிறார்   சவரத்தொழிலாளர்                 சங்கச்  செயலர்    முனுசாமி.


  இன்றைக்கும்  இழிதொழிலாகக் கருதப்படும்         சவரத்தொழில், நகர்ப்புறங்களில்      பல்பரிமாணங்களோடு    ‘வளர்ச்சி’    யை     எட்டியுள்ளதும்      பல இன சாதியைச்   சார்ந்தவர்கள்    இத்தொழிலைச் செய்வதும்   பெரும் பணக்காரர்கள்   இதில்   முதலீடு செய்வதும் வரவேற்கத்தக்கது.    ஆனால் கொழுத்த லாபம் சார்ந்து    சவரத்தொழிலின் இழிவை மறந்து    அதில் ஈடுபடும்   உயர்சாதியினர்தான் கிராமப்புறங்களில் இத்தொழில் குறித்த   இழிவை    உருவாக்குபவர்களாகவும்     குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் மீது    அந்த இழிவைச்   சுமத்துபவர்களாகவும்           இருப்பது    எவ்வளவு      பெரிய    நகைமுரண்.      இன்றைக்கும் மேரைக்கும்      2 ரூபாய் 5 ரூபாய்க்கெல்லாம்     சவரம் செய்யச்சொல்லி நிர்பந்திக்கப்படும் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.    பிணத்திற்குச் சவரம் செய்யக் கட்டாயப்படுத்துவதும் இடுப்பிற்குக் கீழ் சிரைக்கச் சொல்லும் நிகழ்வுகள்      தொடர்வதாகச்  சொல்கின்றார்  சவரத்    தொழிலாளர்    நலவாரிய     உறுப்பினர்     திரு.பழனிமோகன்   அவர்கள்.           நகர்சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள         இத்தொழிலின்    ‘வளர்ச்சிகள்’        சமூக அங்கீகாரங்கள்     என்பவை     இச்சாதியினர் குறித்தும்     சவரத்தொழில் குறித்தும்   நம் சமூகத்தின்   பொதுக்கருத்தை     மாற்றிவிடவில்லை     என்பதை    கவனம்   கொள்ள   வேண்டியிருக்கின்றது.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு ஒரு மதிப்பீடு

தமிழ் இலக்கியம் செய்யுள் மரபிலிருந்து உரைநடைக்கு மாற்றமடைந்தபோது சிறுகதை, நாவல், புதுக்கவிதை என பல வகைமைகள் உருப்பெற்றன. தமிழ் இதழியல் வரலாற்றில் வெகுசன இதழ்களின் வணிக நோக்கிலான வௌதப்பாடுகள் ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் நிலைபாடுகளையும் பழம் மரபுகளையுமே உயர்த்திபிடித்தன. சமூக அரசியல் தளத்தில் மாற்றுத் சிந்தனைகளை உருவாக்கியதாகவும். நவீன தமிழிலக்கிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததாகவும் சிறு பத்திரிகைகளையே அடையாளப்படுத்தமுடியும். 1933ல் தொடங்கப்பட்ட மணிக் கொடி தமிழின் காத்திரமான சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கியது. 1959ல் சி.சு.செல்லப்பாவால் தொடங்கப்பட்ட எழுத்து இதழ் தமிழின் புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாரதிக்குப்பின் புதுக்கவிதைகளில் பல சாதனைகளை நிகழ்த்த எழுத்து களம் அமைத்து கொடுத்தது.

    இலக்கியத்தில் புதிய வடிவம், உத்திகள் ஆகியவற்றில் பரிசோதனைகளைச் செய்ய சிறு பத்திரிகைகளே அடித்தளமிட்டன. அதேநேரத்தில் படைப்புகளின் உள்ளடக்கம் சார்ந்து புதிய சிந்தனைகளை தொடக்க கால சிறுபத்திரிகைகளில் அரிதாகவே காணமுடிகிறது. மக்களை பாதிக்கும் சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்து அழுத்தமான எழுச்சிகள் எதையும் மணிக்கொடி, எழுத்து போன்ற சிறு பத்திரிகைகள் ஏற்படுத்திவிடவில்லை. மார்க்சிய அரசியல் பார்வையின் அடியாக 1936ல் தொடங்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் சார்ந்த தமது எழுத்துச்செயல்பாட்டை அமைத்துக் கொண்டனர். தமிழ் சிறு பத்திரிகை வரலாற்றில் மேற்குறித்த இரு மரபுகள் ஒன்றையொன்று ஒட்டியும் விலகியும் பயணித்து வருவதை இன்றும் காணமுடியும்.

    புதிய பரிசோதனைகள், உருவ உத்தி முறைகள், கலைத்தூய்மை, கலை உன்னதம், தனி மனிதத்துவம் என்னும் அடிப்படையில் ஒரு மரபும், இவற்றைக் கணக்கில் கொள்ளாத மார்க்சிய கோட்பாட்டு அடிப்படையிலானதும், திராவிட பண்பாடு, பாரம்பரியம் எனும் அடிப்படையிலானதுமான பல போக்குகளை சிறுபத்திரிகை வரலாறு உள்ளடக்கியது. இப்பின்புலத்தில் கொல்லிப்பாவை இதழின் இலக்கிய செயல்பாடுகள் புரிந்து கொள்ளப்படவேண்டும். 1976 அக்டோ பரில் முதல் இதழும், 1988 ஜூனில் தனது 20வது இதழுடன் கொல்லிப்பாவை வௌதயீடு நின்றுபோனது. முதல் 12 இதழ்களும் ஆ.ராஜமார்த்தாண்டனின் ஆசிரியர் பொறுப்பிலும், கடைசி 8 இதழ்கள் ஆர்.கே.ராஜகோபாலனை ஆசிரியராகவும் கொண்டு வௌதவந்துள்ளது. நீண்ட இடைவௌதகளுடன் தன் வௌதயீட்டை இது நிகழ்த்தியுள்ளது.

சிறுபத்திரிகை சூழலும், கொல்லிப்பாவையும்
    இடதுசாரி அரசியல் கருத்தாக்கத்தின் அடிபபடையில் படைப்புகளை வௌதயிட்ட இதழ்கள் ஒருபுறமும், படைப்பிலக்கியங்களில் பரிசோதனை, உருவ உத்தி முறைகளின் முக்கியத்துவம், தூய கலை ரசனை போன்ற அடிப்படைகளுடன் வௌதவந்த சிறு பத்திரிகைள் மற்றொருபுறமும் தனித்தனியே இயங்கி வந்த சூழலில் கொல்லிப்பாவை இதழ் அதன் உள்ளடக்கத்திலும் கருத்தியல் நிலைப்பாட்டிலும் மேற்சொன்னதில் இரண்டாவது வகையனதாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. சமூகத்தின் புறவயமான பிரச்சனைகள் சார்ந்து அமைந்த முற்போக்கு பிரிவின் எழுத்துச் செயல்பாடுகளை வெற்று அரசியல் கொள்கை பிதற்றல்கள் என்று கடுமையாக விமர்சித்த தூய கலைவாத போக்கில் கொல்லிப்பாவை தன்னை இணைத்துக் கொண்டது என்றால் மிகையாகாது. அதேவேளையில் கொல்லிப்பாவையில் எழுதிய எழுத்தாளர்களான சுந்தரராமசாமி, பிரமிள், வண்ணநிலவன், நகுலன், வெங்கட்சாமிநாதன், ராஜமார்த்தாண்டன் ஆகியோரும் தமிழகத்தின் இடதுசாரி ஆக்கங்கள் குறித்து பெரிதும் கண்டுகொள்ளவில்லை. இவர்களில் மிரமிள் விதிவிலக்கானவர். கொல்லிப்பாவையில் வௌதயான இவரின் கட்டுரையில் மதநீக்கம் செய்யப்பட்ட கலையின் தேவைகள் சாத்தியங்கள் குறித்து ஆழமாக விவாதிப்பவை. இது இந்து மதம் சார்ந்த கோயில் கலாச்சாரங்களில் உருப்பெற்ற தூய கலை மரபுகள் குறித்து சிலாகிக்கும் வெங்கட்சாமிநாதனின் கருத்தியலுக்கு எதிரானதாகும். கொல்லிப்பாவையின் இதழ் 6,7,8 ஆகியவற்றில் மேற்குறித்த பின்புலத்தில் வெங்கட்சாமிநாதனால் எழுதப்பட்ட 'இரண்டு தலைமுறைகளுக்கிடையில்' எனும் கட்டுரையை ஒட்டி எழுந்த விவாதங்கள் குறிப்பிடத்தக்கன. கோயில் மரபு சார்ந்து உருவான பரதம், சங்கீதம், சமூகத்தின் எல்லா மக்களையும் உள்ளடக்கியதாக அக்கட்டுரையில் வெ.சா. கூறுகிறார். இக்கருத்தை மறுக்கும் சுந்தரராசாமியின் கருத்தும், அதைத் தொடர்ந்த மிரமிளின் கட்டுரையும் கொல்லிப்பாவையின் பண்முகத்தன்மைக்கு உதாரணமாகும். முற்போக்கு இலக்கிய வட்டத்தை ஆதரிக்காதபோதும் மேற்குறித்த விவாதங்கள் இடம்பெற்றமையால் கொல்லிப்பாவையின் முக்கியத்துவம் கூடுதலாகின்றது.

கொல்லிப் பாவை இதழ் தொகுப்பும் தொகுப்பு முறைகளும்
    தமிழுக்கு தொகுப்பு மரபு புதியதன்று. தமிழின் தொல் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை தொகுப்புப் பணியின் தேவை இன்றியமையாத ஒன்று. தமிழ் இலக்கிய, இதழியல் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் தன் வௌதயீடுகளின் மூலம் இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒரு இதழை தொகுக்க வேண்டிய அவசியம் என்ன? இவற்றை தொகுப்பதற்கான பொது நெறிமுறைகள் ஏதேனும் உள்ளனவா? இத்தொகுப்புகளின் வாசக, எழுத்தாள, ஆய்வு ரீதியான பயன்கள் என்னென்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. முதலாவது புதிய தலைமுறை வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழின் முந்தைய இதழியல் வரலாறு மற்றும் இலக்கிய போக்குகள் குறித்து அறிந்து கொள்ள அத்தொகுப்புகள் உதவுகின்றன. தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றை எழுதவும் கற்பிக்கவும் அத்தொகுப்புகள் முதன்மை ஆதாரங்களாக அமையும். இத்தகைய பயன்மதிப்புகளை கொண்ட தொகுப்புகளின் தொகுப்பு முறைகள் சிக்கலானவை. குறிப்பிட்ட காலத்தில் வௌதவந்த இதழில் பல்வேறு கருத்தியல் சார்புடையவர்களும் பங்காற்றி இருப்பர். அவர்களின் பல படைப்புகளில் எதை தொகுப்பில் சேர்ப்பது, விடுவது குறித்த பிரச்சனைகள் எழும். இதழ் தொகுப்புகள் பெரும்பாலும் பொருன்மை அடிப்படையில் தொகுக்கப்படுவது உண்டு. படைப்புகளின் வௌதயீட்டு விவரங்கள் இத்தொகுப்பபுகளில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. குறிப்பிட்ட இதழின் வௌதயீட்டு காலத்தில் இலக்கிய ஆக்கங்கள் சார்ந்து உருவான மாற்றங்கள் வளர்ச்சி நிலைகளை மதிப்பிட இவ்வௌதயீட்டு விவரங்கள் பெரிதும் துணை செய்யும். இன்று தொகுப்புகளாக கிடைக்கும் கலாமோகினி, சுபமங்களா, கனையாழி, தீபம், கசடதபற, சக்தி ஆகிய இதழ் தொகுப்புகளில் படைப்புகளின் வௌதயீட்டு விவரங்கள் ஏதுமின்றி தொகுக்கப்பட்டுள்ளன. இப்பின்புலத்தில் கொல்லிப்பாவையின் இதழ் தொகுப்பு மிகுந்த முக்கியம் பெறுகின்றன. படைப்புகளின் வௌதயீட்டு விவரங்கள் இத்தொகுப்பில் வௌதயிடப்பட்டுள்ளன. மேலும் தொகுப்பு குறித்த முன்னுரிமை பல விவரங்களை உள்ளடக்கியது. இதழ் தொடங்கப்பட்ட சூழல், படைப்புகள் சார்ந்து எழுந்த விமர்சனம், தொகுப்பில் இடம்பெறாத படைப்புகள் குறித்த தகவல்கள் தொகுப்பின் நம்பகத்தன்மையை கூட்டுகின்றது. ஆயினும் கொல்லிப்பாவையின் 20 இதழ்களையும் பார்வையிட்ட பின்பு தொகுப்பின் நம்பகத்தன்மை குறித்து இறுதி முடிவுக்கு வரலாம். ஏனெனில் பிரமிள் சுந்தரராமசாமியின் 'ஜே.ஜே.' சில குறிப்புகள் நாவல் குறித்து எழுதியுள்ள 'புதிய புட்டியில் பழைய புளுகு' எனும் கட்டுரையில் கொல்லிப்பாவை 12ம் இதழில் தான் எழுதிய 'கருக்களம்' எனும் கட்டுரை பற்றி குறிப்பிடுகிறார். (வெயிலும் நிழலும் : 2011) இக்கட்டுரை கொல்லிப்பாவை இதழ் தொகுப்பில் இடம்பெறாதது மட்டுமின்றி தொகுப்புகளிலும் ஏதும் சொல்லப்படவில்லை. இருப்பினும் கொல்லிப்பாவை இதழ் தொகுப்பின் தனித்தன்மையய புரிந்துகொள்ள சந்தையில் கிடைக்கம் வேறு இதழ்களின் தொகுப்புகளுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. தமிழில் அமைப்பியல், தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகள் பெரிதும் விவாதிக்கப்பட அடித்தளத்தை அமைத்துத் தந்ததாக சொல்லும் "மேலும்' இதழ் தொகுப்பில் அடிப்படையான விவரங்கள்கூட காணப்படவில்லை. 'மேலும்' இதழ் தனது வௌதயீட்டை தொடங்கிய ஆண்டு இடைநின்ற, இறுதி வௌதயீடு போன்ற எவ்விதவிவரங்களுமின்றி அத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதழின் ஆசிரியர், தொகுப்பாசிரியர் உரையிலும் மேற்படி எந்த குறிப்புகளும் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. இப்பின்புலத்தில் கொல்லிப்பாவையின் தொகுப்பு முறை தனித்தன்மையானது.

கொல்லிப்பாவையின் படைப்புகள் / படைப்பாளர்கள்
    கொல்லிப்பாவையில் பங்களித்த எழுத்தாளர்கள் முற்போக்கு மரபிற்கு எதிரானவர்கள். தனிமனித அனுபவம் தூய கலைவாதம், கலை உன்னதம் போன்ற சொல்லாடல்களை முன்மொழியும் எழுத்துச் செயல்பாடுகள் கொல்லிப்பாவையில் இடம்பெற்றன. கொல்லிப்பாவையின் கருத்தியலை ஒத்த சிற்றிதழ்களை குறித்து எழுதும்போது வி.அரசு இப்படிச் சொல்வார், "இன்றைய சமூக அமைப்பின் நெருக்கடிகளை கண்டு அவற்றுக்கு தீர்வு காணும் முயற்சியாக 'தேடல்' மேற்கொள்ளும் கண்ணோட்டத்தோடு வௌதவந்த பத்திரிகைகள் பலவாகும். இவை பெரும்பகுதி தனி மனித மனிதத்துவத்தை முதன்மைப்படுத்தின. இயக்கவியல் பொருள் முதல்வாத கருத்துக்களை இவை முழுவதையும் ஏற்றுக் கொள்வதில்லை. (அக்டோ பர் 2011 : ஆக்டோ பசும் கறிக்கோழிகளும்) இக்கருத்து கொல்லிப்பாவையின் செயல்பாடுகளுக்கு முழுவதும் பொருந்துவதில்லை.
  
  1976ல் வௌதவந்த முதல் இதழ் தொடங்கி தமிழின் அக்காலத்திய படைப்பாளர்கள் பலர் கொல்லிப்பாவையில் பங்காற்றினர். பிரமிள், சுந்தரராமசாமி, நகுலன், வண்ணநிலவன், ந.முத்துச்சாமி, எஸ்.ராமானுஜம், கி.ரா, தேவதச்சன், கலாப்ரியா, சுகுமாறன், ஜெயமோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். கட்டுரை, கதை, கவிதைகள் எனும் வகைமைகளில் இவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். ஜெயமோகனின் முதல் கவிதையான கைதி (கொ.ப.18)யும் இதில் அடங்கும். மட்டுமன்றி ஜார்ஜ் லூயி போர்ஹேஸ்,  பீட்டர் ஹாக்ஸ், ஹெர்னன்டோ  டெல்லஸ் ஆகியோரின் சிறுகதைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வௌதயிடப்பட்டன. பிரம்மராஜன், சுந்தரராமசாமி போன்றவர்கள் கவிதைகள் எழுதியதுடன் அவர்கள் மொழி பெயர்த்த பல கவிதைகளும் இடம் பெற்றன. கொல்லிப்பாவையில் இடம்பெற்ற கட்டுரைகள் முக்கியமான விவாதங்களை எழுப்பியவை. கிருஷ்ணன் நம்பியின் கதைகள் குறித்து ஜெ.ஜேசுதானின் விமர்சனம் (கொ.ப.2) படைப்பின் வடிவம் வௌதப்பாட்டு முறைகள் குறித்து விரிவாக பதிவு செய்கிறது. தமிழ்ச்சிறுகதை வரலாறு - ஒரு முன்னுரிமை எனும் எம்.வி.எஸ்.குமாரின் கட்டுரை (கொ.ப.4) சமகால சிறுகதைகளின் போக்குகள் குறித்த விமர்சனமாக அமைந்துள்ளது. அர்த்தமுள்ள நாடக அரங்கம் எனும் கட்டுரை (கொ.ப.4) எஸ்.ராமாஜனுத்தால் எழுதப்பட்டுள்ளது. அரங்கம் என்னும் சொல்லின் பல்வேறு பரினாமங்களை விளக்குவதோடு திராவிட அரசியல் பிரச்சார நாடகங்கள் குறித்த விமர்சனத்தையும் முன்வைக்கின்றது. அதே இதழில் ந.முத்துசாமியால் எழுதப்பட்ட 'தெருக்கூத்து' எனும் கட்டுரை தமிழின் அரங்க கலையாக கூத்து இருப்பதையும் அதிலிருந்து நவீன நாடகம் கற்கவேண்டியவற்றையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமஸ்கிருத நாடக சாஸ்திரத்திலிருந்து பிறந்த கலை வடிவங்களாக கதகளி, யட்சகானம், தெருக்கூத்து, குச்சிபுடி முதலியவற்றைக் கருதுகிறார். தெருக்கூத்தின் பெண் பத்திரங்கள் தனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார். சில அழகற்ற தன்மைகள் கூத்திலிருந்து கலையப்படவேண்டும் எனவும் சொல்கிறார். போர்டு பவுன்டேஷனின் நிதியில் தெருக்கூத்தை நகர்சார்ந்த நடுத்தர வர்க்கத்திற்கு நிகழ்த்திக் காட்டுபவராக இவரை பிரமிள் அடையாளப்படுத்துவார். டாய்லெட் சோப் வாசத்துடன் வந்து தெருக்கூத்தைப் பார்க்கும் மேல்தட்டு பார்வையாளர்களுக்கு தெருக்கூத்தின் இயல்பான தன்மை பிடிக்காததால் மேற்சொன்ன மாற்றங்களை நா.முத்துச்சாமி மேற்கொண்டார் எனவும் மிரம்மிள் கூறுவதை இங்கு பொறுத்திப் பார்க்கவேண்டும். கொல்லிப்பாவையின் 6,7,8ஆம் இதழ்களில் வௌதயான கட்டுரைகள் தமிழ் சமூகத்தின் கலை மரபுகள் குறித்த விவாதங்களை முன் வைத்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெங்கட்சாமிநாதன் எழுதிய "இரண்டு தலைமுறைகளுக்கிடையில் கட்டுரை, கோயில் கலாச்சாரம் சமூகத்தின் எல்லா தரப்பு மக்களின் பங்கேற்புடன் கூடியது என்கிறார். கோயில் சார்ந்து உருப்பெற்ற பரதம், இசை போன்ற கலை வடிவங்கள் பாமரரின் ரசனையை மேம்படுத்தியது; இன்றைய சினிமா கலாச்சாரம் வெகுமக்களின் ரசனையை கீழிறக்கம் செய்து அழித்துவிட்டதாக அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தார். இக்கட்டுரையின் கருத்தியலில் மாறுபாடு கொண்டதாக சுந்தரராமசாமியின் கடித வடிவிலான கட்டுரையும் அதன்பொறுட்டு வெங்கட்சாமிநாதனின் விளக்கமும் கொல்லிப்பாவை 7ல் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்த இதழில் 'வெகுசன ரசனையும் மதமரபும்' என்ற மிரமிளின் கட்டுரை மேற்குறித்த இருவரின் கருத்துக்களிலிருந்தும் மாறுபட்டது. அதில் இந்திய கலை மரபுகளை முற்றாக மதநீக்கம் செய்ய வேண்டிய தேவைகள் குறித்து பேசுகிறார். சாதி, மதம் கடந்த கலைகளாக கோயில் கலைகள் இருந்ததில்லை என்றும் குறிப்பிடுகிறார். கலை குறித்து இந்து மதம் சார்ந்த பிராமணப் பார்வைக்கும் திராவிட அரசியலால் உருவான கலை பண்பாட்டுப் பார்வைக்கும் கட்சிக்கருத்தை கலையாக பாவிக்கும் முற்போக்கு வட்டத்தின் பார்வைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்று மிரம்மிள் குறிப்பிடுவதை இக்கட்டுரையில் காணமுடிகிறது.
    கொல்லிப்பாவையில் வௌதயான மொழி பெயர்ப்புச் சிறுகதைகளில் பெர்ணாட்டோ  டெல்லசின் கதை ஒன்று எம்.யுவனால் பெறும் நுரைதான் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (கொ.ப.19). ராணுவ அதிகாரி ஒருவருக்கும் சவர தொழிலாளிக்கும் இடையிலான சந்திப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை. அக்கதையின் சவரத் தொழிலாளி ராணுவ அதிகாரியாலும் கதையாசிரியராலும் குறிப்பிடப்படும் இடங்களில் அம்பட்டன் என்றே குறிப்பிடப்படுகிறார். மேற்கு நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கதையை தமிழில் மொழி பெயர்க்கும்போது நம் மொழி பெயர்ப்பாளர்களின் தமிழ்த்தன்மை / இந்திய தன்மை வௌதப்படுவதை இதில் காணலாம். மேற்கத்திய கலாச்சாரத்தில் சாதிய முறைகள் இல்லாதபோதும் சவரத் தொழில் செய்யும் கதாப்பாத்திரத்தை இந்திய / தமிழ்ச்சூழல் சாதி அடையாளத்துடன் குறிப்பிடுகிறது. இப்போக்கு வெகுசன தளத்தில் மட்டுமின்றி மாற்று அரசியல் கலை இலக்கிய செயல்பாடுகளின் தளமான சிறு பத்திரிகை சூழலிலும் காணக்கிடைக்கின்றது. தமிழ் சிறுபத்திரிகைள் குறித்து அ.மார்க்ஸ் இப்படிச் சொல்வார், "தமிழில் நவீன இலக்கியங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானதுதான் எனினும் வெகுசனங்களிடமிருந்து விலகிய மேட்டிமைதன்மை, மக்களை பாதிக்கும் அரசியலிலிருந்து முற்றாக விலகி நிற்றல், மேற்சாதி பின்புலம், திராவிட / மார்க்சிய கருத்தியல்கள் மீதான வெறுப்பு ஆகியவை தமிழ் சிறு பத்திரிகைகளின் பண்புகளாக இருந்துள்ளன. வெங்கட்சாமிநாதனின் கோயில் கலாச்சாரம் குறித்த கட்டுரையும் தேவையற்ற அம்சங்கள் - அழகற்ற தன்மைகள் தெருக்கூத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்ற ந.முத்துச்சாமியின் கட்டுரையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளப்படவேண்டியவை. வெகுமக்கள் கலையை தூய்மையற்றதாகவும் ஒழுங்கற்றதாகவும் கருதும் மேட்டிமை சிந்தனை இக்கட்டுரைகளில் வௌதப்படுகின்றது. இக்கருத்துக்களை கடுமையாக விமர்சிக்கும் மிரமிளின் கட்டுரையும் கொல்லிப்பாவையில் வௌதயாகியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. சாதிகளற்ற சமூகத்தில் எழுதப்படும் ஒரு கதை தமிழுக்கு வரும்போது கதையின் கதாப்பாத்திரம் அது செய்கின்ற தொழிற்சார்ந்து சாதிப்பெயரால் குறிப்பிடப்படுகின்றது. அதுவும் அக்குறிப்பிட்ட சாதியை ஆதிக்க சாதியினர் குறிக்கும் இழி வழக்கால் குறிக்கப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்வது? சாதி, மத நீக்கம் செய்யப்படாத, சாதிய மனோபாவத்துடன் செயல்பட்ட படைப்பாளர்களின் உளவியலையே இது சுட்டிக்காட்டுகின்றது.
   
 கொல்லிப்பாவையில் மறுபிரசுரங்களாக சில எழுத்துக்களும் வௌதயிடப்பட்டன. 'ஆற்றங்கரை பிள்ளையார்' என்ற புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத சிறுகதை இப்படி வௌதயானதுதான். எம்.வேதசகாயகுமார் தன் முனைவர் பட்ட ஆய்வு தேடலின் ஊடாக கண்டறிந்த இக்கதை கொல்லிப்பாவையில் வௌதயான பிறகே ஐந்திணை பதிப்பக வௌதயீடாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி வட்டத்தைச் சார்ந்தவர்கள் சிற்றிதழ் செயல்பாடுகளில் பங்கு கொள்வதில்லை என்னும் கருத்தை கொல்லிப்பாவை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. புதுமைப்பித்தனின் கதை கண்டெடுக்கப்பட்டு மறுபிரசுரமானதை 'கொல்லிப்பாவையில் காணலாகும் கல்வி வட்ட பண்பு' என குறிப்பிடுவார் வேதசயாககுமார்.

இறுதியாக...
    கலை  உன்னதம், தனி மனிதத்துவம் போன்றவற்றை வலியுறுத்தும் சிற்றிதழ்களும் பொருள் முதல்வாத சிந்தனையை அடிப்படையாக கொண்ட சிற்றிதழ்களும் ஒன்றையொன்று மறுத்தே இயங்கி வந்துள்ளன; வருகின்றன. கொல்லிப்பாவை இந்த மரபிலிருந்து விலகி நடந்தாலும் எழுத்து இதழின் புதுக்கவிதை மரபை முன்னெடுக்கும் பொருட்டு புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இடதுசாரி பின்புலத்துடன் வௌதவந்த சிற்றிதழ்கள் அவற்றின் பரிணாமத்தில் அமைப்பியல், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் ஆகிய சிந்தனை போக்குகளுக்கு இடமளித்துள்ளது என்பார் ராஜ்கவுதமன். (ராஜ்கவுதமன்: 1992). முற்போக்கு இலக்கிய மரபை பெரிதும் கண்டுகொள்ளாத கொல்லிப்பாவையின் இலக்கிய செயல்பாடுகளில் மிரமிளின் பங்களிப்பு தனித்துவமானது. கலை உன்னதம் என்பது சாதிய மரபுக்கும் மத மரபுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கவேண்டுமென்ற மிரமிளின் பார்வைக்கும் வெங்கட்சாமிநாதனின் கலை உன்னத பார்வைக்கும் பெரிதும் வித்தியாசமுள்ளது. வேறுபட்ட பார்வைகள் கொண்டவர்களை கொல்லிப்பாவை ஒருங்கிணைத்துள்ளது. 70ன் இறுதி தொடங்கி 80ன் இறுதி வரையிலான தமிழ்ச்சிற்றிதழ் எழுத்தாளர்களின் படைப்புகள் சார்ந்த விவாதப் புள்ளிகளை கொல்லிப்பாவை ஒருங்கிணைத்துள்ளதை அறியலாம். தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த படைப்புச் செயல்பாடுகள் அவற்றை ஒட்டிய விவாதங்கள், கொல்லிப்பாவை படைப்பாளர்களின் கருத்தியல்கள், இலக்கிய சாதனைகளை அறிந்துகொள்ள இத்தொகுப்பு உதவும். தொகுப்பு முறையியல்களோடு கொல்லிப்பாவையின் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுப்பு மருதா பதிப்பகம் 2004ல் வௌதயிட்டுள்ளது.

1.    ஆக்டோ பசும், கறிக்கோழிகளும் - அக்டோ பர் 2011, இளவழகன் பதிப்பகம்

2. இலக்கியத்தில் இந்துத்துவம் ; காலச் சுவடின் ஆள்காட்டி அரசியல், நிறப்பிரிகை வௌதயீடு

3.    'மேலும்' இதழ் தொகுப்பு - டிசம்பர் 2007 காவ்யா பதிப்பகம்

4.    வெயிலும் நிழழும் - டிசம்பர் 2011, வம்சி

5.    வரலாற்று சலனங்கள் - டிசம்பர் 2011, வம்சி

6.    'முன்னவன்' மணிக்கொடி பொன்விழா மலர் 1983

7.  எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம், ராஜ்கவுதமன், நவம்பர் 1992, காவ்யா பதிப்பகம்

திங்கள், 13 பிப்ரவரி, 2012


ரஜினி -எஸ்.ரா-மற்றும் வயிற்றெரிச்சல்கள்


by Thiru Priyadhasi on Tuesday, 7 February 2012 at 23:58 ·


இலக்கிய விழாவில் ரஜினியா?கடந்த வாரத்திலிருந்து 'இலக்கிய அனுதாபி'களின் பேச்சு இதைப் பற்றியதாக இருப்பதைக் காண்கிறோம்.என்னிடம் கூட(!) ஒரு நண்பர் இது குறித்து அதிகம் விசனப்பட்டார்."ஏன் ரஜினி தீண்டப்படாதவரா?" என்று கேட்டேன். "இருந்தாலும் ஒரு தூய்மையான இலக்கிய விழாவில் ரஜினி எப்படி கலந்துகொள்ளலாம் .. ஆ..ஊ.."என்றார்.
இது குறித்து கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். எனக்கும் பொழுது போகவேண்டுமில்லையா?
இந்த எஸ்.ரா.இருக்கிறாரே, மனிதர் ஒரு 'மிதவாத' எழுத்தாளர். அதாவது எதைக்குறித்தும் யாரைக்குறித்தும் ஒருபோதும் யாதொரு எதிர்மறைக் கருத்தும் (அ) கருத்தும் கூறாதவர். ஆனால் அவரையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட தருணம் ஒன்றுண்டு. "காவல் கோட்டம் ஆயிரம்பக்க அபத்தம்" தான் அது. மேலும், ஈழப்படுகொலைகளின் போதும் தலித் படுகொலைகளின் போதும்,இரவுகளில் அழுது புலம்பி தூக்கமின்றி தவித்ததாகச் சொல்லிக்கொண்ட அவர் அவைகள் குறித்து ஒரு வரி கூட எழுதியதில்லை.(அப்படி இருந்தால் குறிப்பிடலாம்).
அவரது எழுத்துக்களில் ஒருபோதும் அரசியல் இருந்ததில்லை.
மாறாக எழுத்துக்களற்ற அரசியல் வேலைகளில் அவர் ஈடுபடுவதுண்டு. அதாவது, பலரையும் அரவணைப்பது போல் பாசாங்கு செய்வது தான் அந்த அரசியல்.  தன்னை விமர்சிப்பவர்களிடமிருந்து தப்பிக்க அவர் விரிக்கும்  வலை அது. அந்த வலையில் பெருவாரியான புத்தகக்காரர்கள் மாட்டிக்கொண்டனர் என்பதே உண்மை.
அதில் முக்கியமானவர் சாரு நிவேதிதா. இவர் இருக்கிறாரே..இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளது. உண்மையில் மனுஷன் ஒரு வெள்ளந்தி தான். யார் சிரித்தாலும் நம்பி விடுவார். நித்தி,மிஷ்கின்,கோபிநாத்,திருவண்ணாமலை சடையப்பர், அக்கினிப்புத்திரன் என்று அந்த பட்டியல் நீண்டது. அதே போலத்தான் எஸ்.ரா.வின் பாசாங்கான நட்பில் மயங்கி தனது எழுத்துக்கான கச்சாப் பொருளை இழந்தார். ஆம், பழைய சாருவாக இருந்திருந்தால் இந்நேரம் எஸ்.ரா. டரியல் ஆகியிருப்பார். எல்லாம் அந்த அக்கினிப் புத்திரனால் வந்தது. அவர் தான் பதிப்பக ஆசைக்காட்டி சாருவை சாந்தமாக்கிவிட்டார் போலும். பாவம் சாருவும் தான் என்ன செய்வார். போகட்டும். இது குறித்து வேறொரு சமயத்தில் பேசலாம்.
ஆகவே, தன் எழுத்தில் கிஞ்சித்தும்  அரசியல் பேசாத  ஒருவர்,சந்தர்ப்பம் வாய்த்தால் பா.விஜய்யை பாப்லோ நெரூடா அளவிற்கு ஒப்பிடக்கூடிய ஒருவர், ரஜினியை அடம்பிடித்து அழைத்து வந்ததில் என்ன பிழையைக் கண்டீர்கள்? என்பதே என் கேள்வி யுவர் ஹானர்.
மாறாக ஒரு அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா போன்றோர் இது மாதிரியான காரியத்தை செய்திருந்தால்(மாட்டார்கள்) அதுதான்  விமர்சிக்கப்பட வேண்டியதே  தவிர எஸ்.ரா.இல்லை. அவர் இலக்கியம் என்கின்ற பெயரில் காரிய பலன்கள் பெற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஒருவர். இவ்விஷயத்தில் அவர் இன்னொரு வைரமுத்து. இனி இது போன்ற காரியங்களுக்காக யாரும் அவரைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
அடுத்து இன்னொன்று.
தமிழ் நடிகர்களுக்கு இலக்கியத்தில் அ..ஆ..கூட தெரிவதில்லை..பட்சே கேரளத்தில் பாருங்கள் மம்மூட்டி எல்லாம் எவ்வளவு அக்கறையுடன் இலக்கிய கூட்டங்களுக்கு வருகிறார் கர்நாடகாவில் பாருங்கள் க்ரிஷ் கர்னட் லாம் எப்படி இலக்கியம் வளர்க்கிறார்  என்றெல்லாம் பிற மாநிலப் புகழ் பிரஸ்தாபிப்பவர்கள் எல்லாம் ரஜினி விஷயத்தில் ஏன் வயிரேரிகின்றனர்  என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று நண்பர்களே..இந்த விருது விழா மூலம் அக்கினிப்புத்திரன் தனது வீழ்ச்சியை  தானே தொடக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.   

- முனைவர் சா.திருவாசகம்


அப்பனின் கைகளால் அடிப்பவன்


அப்பனின் கைகளால் அடிப்பவன்

by Thiru Priyadhasi on Saturday, 11 February 2012 at 00:23 ·
நேற்று இரவுதான் சந்தித்தேன் அந்த மனிதரை .அதுவும் தற்செயலாக. இரவு பத்தரை மணிக்கு, நண்பன் நறுமுகை ஜெ.ரா.வுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் பல்கலைக் கழகத்தின் விடுதிக்கு எதிரில் மெரீனா கடற்கரையில் இப்படி அமர்ந்து நாங்கள் உரையாடி ரொம்ப நாளாகிவிட்டதால் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. அதைக் கெடுக்கும் விதமாக வந்தவர்தான் நான் மேலே குறிப்பிட்ட மனிதர். பெயர் அதியன். கவிஞராம். கண்டிப்பாக புனைப்பெயராகத்தான் இருக்கும்.அவரது கவிதை வெளியீட்டிற்கு நண்பன் ஜெ.ரா.வை அழைக்க வந்தாராம். எனக்கு இந்த கவிஞர் என்கின்ற லேபிலோடு வருபவர்களைக் கண்டாலே நடுக்கம் வந்துவிடும். ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை, திண்டிவனம்,வந்தவாசி பகுதிகளிலிருந்து தினம் தினம் கோயம்பேட்டில் கால் பதிக்கும் இளங்கவிகளைக் காணும்போதெல்லாம் மனம் திகிலெடுக்கும். என்னவளே..அன்பே..என்று ஆரம்பித்து ஏகத்திற்கும் வர்ணித்திருப்பார்கள் பெண்களை. அதுவும் நோட்புக்கில் ஒரு பக்கம் மட்டுமே எழுதி, பூவெல்லாம் வரைந்து, கிட்டத்தட்ட அச்சடிக்காத கவிதைப் புத்தகம்  போலவே வைத்திருப்பார்கள். கண்டிப்பாக பாவலர் அறிவுமதியின் அணிந்துரை வாங்கும் திட்டமிருக்கும். அந்த பயம் இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. எனவே முடிந்த வரை அவரிடம் பேச்சு கொடுத்துவிடாமல் எவ்வளவோ தவிர்க்கப் பார்த்தேன். ஆனால், சடங்கிற்காக எனக்கும் ஒரு அழைப்பிதழைக் கொடுத்தார். நானும் சடங்காகவே  அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்தேன். சட்டென்று அந்த தலைப்பு என் அசுவாரஸ்ய மன நிலையைக் கலைத்தது.  
                                                                "அப்பனின் கைகளால் அடிப்பவன்".
திடீர் ஆர்வமாகி அவரிடமிருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். நினைத்ததைப் போலவே அணிந்துரை அறிவுமதி.சலிப்பாகி, ஏதோவொரு  பக்கத்தைப் பிரித்தேன்.
                                                        " வான் வழி
                                                           தரை வழி
                                                           நீர் வழி
                                                           சண்டையிடும் உலகில்

                                                           வழியில்லாமல் தவிக்கிறோம்
                                                           சுடுகாட்டிற்கு "
உடனே புரிந்துவிட்டது. இந்த மனிதன், என்னவளே..அன்பே..கவிஞர்கள்  வகையறா இல்லையென்று.                        (அ.அ. இருந்தும்) .  
இன்னும் சிலவற்றைப் படித்தேன். சமூக அரசியல் பேசும் கவிதைகள். இந்த அரசியல், சினிமாப்பாட்டு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு,நமது கிராமக் கவிகள் முழக்கமிடும் வழக்கமான அரசியல் இல்லை.
இது வேறு. சமநீதிப் போராட்டத்திற்கானது.ஆகவே..அதியன் ஐந்து நிமிடத்திலேயே எனக்கு மிக நெருக்கமான ஒருவராகத் தெரிந்தார். அழைப்பிதழை நன்றாகப் படித்தேன்.
பிப்ரவரி.19 ஞாயிறு அன்று மாலை.5 மணிக்கு நூல் வெளியீடு. இக்சா மையம்,எழும்பூர்.
அன்பாதவன்,யாழன் ஆதி, உமாதேவி ஆகியோர் நூல் குறித்து கருத்துரைப்பதாகப் போட்டிருந்தது. நானும் பேசலாமா என்று வாய்விட்டுக் கேட்க நினைத்தேன்.கேட்கவில்லை. நாளைக்கு கேட்டு அனுமதி வாங்கி எப்படியாவது கருத்துரைக்க முயல்கிறேன்.
இவர்  போன்ற படைப்பாளிகளைக்  குறித்துப் பேசுவதைத் தவற விடக்கூடாது.

- முனைவர் சா.திருவாசகம்
 ·  ·  · Share

எனது புகைப்படங்கள்


தோழர் பொன்னுசாமியுடன்

 

 

 

 

 
மண்டகப்பட்டில் ஜெ.ரா மற்றும் மு.ஹரியுடன்


 

 

 
பனமலையில்...


 

 
கீழ்வாலையில்...


 

 


செஞ்சி -  பனஞ்சாலை நிகழ்வில்...-

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

அழைப்பிதழ்

தோழர் அதியனின் கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.







பீ வாசம்

by Thiru Priyadhasi on Monday, 13 February 2012 at 08:43 ·
பீ வாசம் உலகின் வேறெந்த நாடுகளிலும் இந்த 'கண்டுபிடிப்பு' இருக்குமாவென்று தெரியவில்லை. பொது இடங்களை 'ஆய்' போகும் இடங்களாக மாற்றிவிடும் திறன்  இந்தியர்களால்தான் சாத்தியப்படுத்த முடியுமென்று நினைக்கிறேன். குறிப்பாக வழிப்பாதைகள். சென்னை மக்கள் கழிவுக்கு பயன்படுத்தாத  சாலையோரங்கள், பிளாட்பாரங்கள் மிகக் குறைவு. விடியற்காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் மெரீனா கடற்கரைக்குச் சென்றால் உலகின் மிக நீண்ட 'ஆய்' வரிசையைக் காணலாம்.
சென்னைதான் என்றில்லை. ஊர்ப்பகுதிகள் கூட இதற்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை. மழைக்காலங்களில் ஊர் மக்கள் ஆய் போக படுகின்ற பாடுகள் அலாதியானவை.
இதைப்பற்றி அழகிய பெரியவன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். தலித் முரசில் வெளியானதாக நியாபகம்.
 நேற்று  ஊருக்குப்போய்விட்டு திரும்பி வரும்போது.(ரயில்)அதிகமான ஆண்,பெண் புட்டங்களைப் பார்க்க நேர்ந்தது. ரயில் தண்டவாளங்கள் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டு,வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்ற அழகிய காட்சிகளைக் கண்டேன். காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மரபை புதிதாகச் சொல்கிறானே, இவன்  என்ன  ஃபாரின் ரிட்டர்னோ  என்றெல்லாம் நினைத்துக் கொள்ளவேண்டாம்.
இந்தியன் ஒருவனின் ஜெனரல் கம்பார்ட்மென்ட் பயண அநுபவம் எவ்வளவு ரஸமானவை என்பதைப் பல ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். ரயிலில் ஏறிய ஒன்னரை மணி நேரம் கழித்து எப்படியும் இடம் கிடைத்துவிடும். அப்பர் பெர்த். அதாவது, லக்கேஜ் வைக்கும் இடம். தலை மின்விசிறியில் முட்டும்.கால்களைச் சுருட்டி பேன்ட் பாக்கெட்டுக்குள் தான் வைத்துக் கொள்ளவேண்டும். இப்படி இன்னும் நிறைய விசேஷங்கள் கொண்ட அப்பர் பெர்த் பயணங்களே அதிகம் வைத்திருந்ததால் இவ்வளவு நெருக்கத்தில் புட்டக்காட்சிகள் கண்டதில்லை.  நேற்று அதிசயமாய் கீழே உட்கார (சீட்டில்தான்) இடம்கிடைத்தது.(அந்த ஜோலார்பேட்டை இஸ்லாம் இணையர்களுக்கு அல்லாஹ் அருள் கிட்டுக!).
நீ....ண்ட நாட்கள் கழித்து ரயிலில் ஜன்னலோரப் பயணம். வறண்ட மலைகள், வயல்களோடு  நிறைய புட்டங்கள். கையில் ஒரு புத்தகம் இருந்தது. அதில் ஒரு கவிதை இப்படி இருக்கிறது.

                                                 " இரயில் பயணம்
                                                   சிறு தூறல்கள்
                                                   மண் மணத்தை மீறி எழும் 
                                                    பீ வாசம்...."

தண்டவாளங்களை மிக நீண்ட கக்கூஸ்களாய் உருமாற்றம் செய்யும் இந்தியர்களின் வினோத மனநிலையையும் காலம் காலமாக இதை செய்ய வைக்கும் ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனமும் குறித்த கேள்விகள் எழுந்தன இவ்வரிகளைப் படித்ததும்.
இதனை எழுதியவர் அதியன். இக்கவிதை " அப்பனின் கைகளால் அடிப்பவன் "என்கின்ற தொகுப்பில் உள்ளது. இன்னும் வெளியிடப்படாத இந்நூல் வரும் 19 ம் தேதி எழும்பூர் இக்சா மையத்தில்(கன்னிமரா நூலகம் எதிரில்) வெளியிடப்பட உள்ளது.அனைவரும் வருக.   

- முனைவர் சா.திருவாசகம்